Saturday, October 22, 2011

குமரிக்கண்டம் (இலெமூரியா)

 குமரிக்கண்டம்
ஒரு காலத்தில் சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என்கிறார், அறிஞர் ஓல்டுகாம் அவர்கள்.


பேரறிஞர் எக்கேல் மற்றும் கிளேற்றர் இருவரும் ஒருமனதாக சந்தாத் தீவுகளிலிருந்து†தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாக ஆப்பிரிக்காவின் கீழைக்கரை வரை ஒரு பெரிய நிலப்பரப்பு பரவியிருந்த தாகவும், அங்கே குரங்கையொத்த உயிரினம் “இலெமூரியா†(Lemuria) வாழ்ந்தன எனக் கூறுகின்றனர்.



பேரறிஞர் திரு. கட்டு எலியட் என்பவர் தாம் எழுதிய “மறைந்த லெமூரியா  (Lost Lemuria) என்ற நூலில் காட்டியுள்ள நில வரைபடத்தில் ஒரு பெரிய மலைத் தொடர் மேடைக்கடலில் தொடங்கித் தென் வடக்காகக் குமரிமுனை வரை சென்று பின்பு தென் மேற்காகத் திரும்பி மடகாசுக்கர் என்னும் ஆப்பிரிக்கத் தூவு வரை சென்றது எனச் சுட்டிக் காட்டுகிறார் என பேராசிரியர் திரு. கா. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் கூறுகின்றார்.



ஆஸ்திரேலியா, சாலித்தீவையும், தென்னாப்பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்த நாடே “குமரி கண்டம்†என்கிறார் திரு. தேவநேயப்பாவாணர். இக்கண்டத்தில் தோன்றியவன் தான் “மாந்தன்†இவனை குமரிமாந்தன் என்பர். இவனுடைய நிலை மொழியற்ற ஊமையர் நிலை தோரா. கிமு.500000-100000 வரையாகும்.



குமரிமாந்தரின் மொழியற்ற நிலை “சைகை மொழி†



குமரி நாட்டு மாந்தன், முற்காலகட்டத்தில் ஆடையின்றி விலங்குகளைப் போல் தன் இச்சைகளைப் பெற்று வந்தான். மனவுறமுமின்றி, மொழியுணர்ச்ன்சியுமிறி, உணர்ச்சியொலிகளையும், விளியொலிகளையும் கையாளத் தொடங்கினான். காலப் போக்கில் தன் கருத்துக்களைச் சைகைகளாலேயே வெளிப்படுத்தி வந்தான். (Gesture Language or Sign Language) இதை ஊமையர் மொழி என்றே கூறலாம்.



இயற்கை மொழி தோரா. கி.மு.1,00,000 – 5,00,000



எழுத்தும், உச்சரிப்பும் சொற் பொருத்தமும் இல்லாமல் இயல்பாகப் பேசப்படும் ஒலித்தொகுதி (Natural Language) இயற்கை மொழியாம், இம்மொழியை “முழைத்தல் மொழி†(Gesture Language – or Sign Language) என்கிறோம். இம்மொழியின் ஒலிகள் 8 வகைப்படும். அவை

1. உணர்ச்சியொலிகள் (Emotional Sounds) இன்ப துன்ப உணர்வை வெளியிடும் ஒலிகள்.

2. விளியொலிகள் (Vocative Sounds) பிறரை விளித்தல், அழைத்தல், கூப்பிடிதல் போன்றவைகள்.

3. ஒப்பொலிகள் (Imitative Sounds) இரு திணைப் பொருளுரைக்கும் ஒலிகள்.

4. குறிப்பொலிகள் (Symbolic Sounds) வழக்கப்படி கருத்துக்களைத் தெரிவிக்கும் ஒலிகள்.

5. வாய்ச் செய்கையொலிகள் வாயினாற் செய்யும் செய்கைகளும் செயல்களும்.

6. குழவி வளர்ப்பொலிகள் (Nursery Sounds) குழந்தைப் பருவத்தினருக்குப் பொருந்தும் ஒலிகள்.

7. சுட்டொலிகள் (Decitive Sounds) சுட்டிக் காட்டும் ஒலிகள் சுட்டொலிகள், மற்றும்.

8. வினாவொலிகள் என்பவைகளும் உண்டு, அவை ஐயம், சந்தேகம் மற்றும் வினாக்களை எழுப்பும் ஒலிகள் எனப்படும்.



தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000

மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும். இதைச் செயற்கை மொழி (Artificial Language or Artificial Speech) என்கிறோம். மொழித்துணையின்றி மூவகைச் சுட்டொலிச் சொற்களால் கருத்துக்களைப் பரிமாறும் ஊமையர் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள்.





தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்

தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி†வாயிலாகவும், நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம், கையாண்ட மொழி தமிழ் திராவிட மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும், தமிழனும், புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்.



குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும்

பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திலு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு. தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். 



இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிட நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும், கல்வெட்டுக்களும் உதவுகின்றன.





குமரிக்கண்டப் பழங்குடிமக்கள் தமிழர்களே!

குமரிக்கண்டத்தின் பெரும் பகுதியாகிய பழந்தமிழ் நாட்டை ஆண்டவன் தமிழனே! அம்மொழியும் தமிழ் மொழியே! கடல் கோள்களால், தமிழனின் புகழும், நாடும், மொழியும் அழிவுற்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கடல்கோள்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பலப் பல. நான்கு முறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்கள் குமரிக் கண்டத்தை அழித்து நாசமாக்கியது.

நான்கு பெருங் கடல் கோள்கள்

1. முதல் சங்கம் – தென்மதுரை – கடல் கொண்டது

2. இரண்டாவது – நாகநன்னாடு – கடல் கொண்டது

3.மூன்றாவது இடைச்சங்கம் – கபாடபுரம் – கடல் கொண்டது

4. நான்காவது – காவிரிப்பூம்பட்டிணம் – கடல் கொண்டது.

சிறுகடல் கோள்கள் எண்ணில் அடங்காது.



தொல்காப்பியம்

பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த குமரிமாந்தனின் காலத்தைவிட பல்லாயிரம் ஆண்டுகள் பிந்தியதே தொல்காப்பியம். தொல்காப்பியம் தோன்றிய காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கும், கி.மு 5-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாகும். தொல்காப்பியர் காலத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே தமிழ் மொழி மிகச் சிறப்புற்றிருந்தது. சிறப்பு மிக்க தமிழ் இலக்கியங்கள் பல இருந்தன. ஆனால் அவைகள் அனைத்தும் ஏற்பட்ட கடல் கோள்களால் முழுமையாக அழிவுற்றன.



மூன்று தமிழ்: தமிழ் மொழி தோற்றத்தையும் வரலாற்றுக் காலத்தையும் பல பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்.

1.பழந்தமிழ்
2.இடைக்காலத்தமிழ்
3. தற்காலத்தமிழ்



1. பழந்தமிழ் (Ancient Tamil)

உட்பிரிவுகள் மூன்று.

அ. முன்பழந்தமிழ் – தொல்பழந்தமிழ் - Early ancient Tamil (or) Proto Ancient Tamil

ஆ. மத்திய பழந்தமிழ் – Medieval Ancient Tamil

இ. பின்பழந்தமிழ் – Later Ancient Tamil



2. இடைக்காலத் தமிழ் (Medieval Tamil)

உட்பிரிவுகள் மூன்று.

அ. முன்இடைக்காலத் தமிழ் – Early Medieval Tamil

ஆ. மத்தியஇடைக்காலத் தமிழ் – Medium Mediaval Tamil

இ. பின்இடைக்காலத் தமிழ் – Later Medieval Tamil



3. தற்காலத் தமிழ் (Modern Tamil)

உட்பிரிவுகள் மூன்று.

அ. முன் தற்காலத் தமிழ் – Early Modern Tamil

ஆ. பின் தற்காலத் தமிழ் – Later Modern Tamil



முன்பழந்தமிழ் அல்லது தொல்பழந்தமிழ்

திராவிட மொழிகள் பல உள்ளன. அவைகள் அனைத்தும் தமிழ் என்ற ஒரு மூல மொழியிலிருந்து உருவானவைகள். தொல்பழங்காலத்தில் திராவிட மூல மொழியாக இருந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து, காலத்தாலும் இடமாற்றங்களாலும் வெவ்வேறு மாற்றமடைந்து வளர்ந்தவைகளே பிறமொழிகள். அவற்றை நாம் â€திராவிட மொழிக் குடும்பம்†என்று அழைக்கிறோம். பல மொழிகள் உருவாக மூலமாக, கருவாக இருந்த மொழியினைத் தொல்திராவிட மொழி அல்லது மூலத்திராவிட மொழி (Proto Diravidan Language) என்கிறோம்.



திராவிட மொழிக் குடும்பம்

மூலத்திராவிட மொழி அல்லது தொல் திராவிட மொழியாகத் திகழ்ந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து சென்ற மொழிகளைத் திராவிட மொழிக் குடும்பம் என்கிறோம். தமிழ், கோண்டி, கூயி, கூவி, கோவாமி, மண்டா, கொண்டா, நாயக்கி, குருக், மால்தோ, பிராகூய் போன்றவைகளோடு இன்னும் பல பல உண்டு. திராவிட மொழிகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

1. தென் திராவிட மொழிகள் – தமிழ், மலையாளம், கன்னடம்.

2. நடுத்திராவிட மொழிகள் – தெலுங்கு, கோண்டி, கூயி, கூவி மேலும் பல உள்ளன.
3. வடதிராவிட மொழிகள் – குருக், மால்தோ, பிராகூப் மேலும் பல உள்ளன.



தமிழ்மொழியின் பெரும்புகழ்

திராவிட மொழிகளில் மிகப் பழமை வாய்ந்த மொழி தமிழ். சுமார் ஐந்தாயிரம் (5000) ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண நூல்களையும் பல இலக்கியங்களையும் பெற்று பாரெங்கும் புகழ்பரவ, பெரும் வளர்ச்சி பெற்றிருந்த ஒரே மொழி தமிழாகும். திராவிட மொழியை ஆய்வு செய்த பேரறிஞர்கள் திரு. பர்ரோவும், திரு. எமனோவும் இணைந்து “திராவிடச் சொற்பிறப்பியல் அகராதி†(Diravidan Etymological Dictonary) வெளியிட்டனர் என்றால், தமிழ் மொழியின் வளர்ச்சியை உணருங்கள்.





தமிழினம் மற்றும் மொழிச் சிதைவு

உலகெங்கும் தன்னிகரற்ற பேரரசனாகக் கொடிகட்டிப் பறந்த தமிழினமும், அவன் தாய் மொழியாகிய தமிழ் மொழியும், நான்குமுறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்களால் அழிவுற்றது. அப்பெரும் கடல் கோள்களால் குமரிக்கண்டம் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலுமே பேரழிவுகளால் மலை மடுவானது, உலகின் பல நாடுகள் அழிவுற்றன. உயிரினங்கள் மாண்டன, மொழிகளும் சிதைவுற்றன. அவ்வாறே குமரிக்கண்டமும் நீரில் மூழ்கி அழிவுற்றது. இந்த அழிவுகளால் தமிழின் மரபு, பண்பாடு, கலாச்சாரம், தமிழ் இலக்கணங்கள், இலக்கியங்கள் அத்தனையும் சிதைந்து நாசமாகியது. உலகின் பூகோள வடிவமே மாற்று வடிவம் பெற்றது.


 வரலாற்றுச் சான்றுகள்

வரலாறு பலவகை உண்டு. அவற்றில் மொழிவரலாறும் ஒன்று. மொழி வரலாறு என்பது மொழியின் தோற்றம், வளர்ச்சி, காலங்கள் தோறும் ஏற்படும் மொழியின் மாற்றங்கள், பிறமொழிக் கலவை, வரிவடிவ மாற்றங்கள் இப்படிப் பல மொழிச் செய்திகளை நமக்குத் தருவது மொழி வரலாறு. ஒரு மொழியின் வரலாற்றைப் படைக்க, சான்றுகளே முக்கியப் பங்கேற்கிறது. சான்றுகளின்றிப் படைக்கப்படும் வரலாறுகள் வரலாறுகள் அல்ல, அவைகள் கதைகளாகக் கருதப்படும்.



தமிழ் மொழி வரலாற்றுச் சான்றுகள்

மொழிகள் காலத்திற்குக் காலம் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மொழிகள் தோன்றிய காலம் எதுவென்று சரிவரக் கூறமுடியாத நிலை இன்னும் நீடிக்கிறது மனிதன் என்று தோன்றினான்? உயிரின வளர்ச்சிகள், மொழிகளின் இயற்கைத் தோற்றம், அவற்றின் வளர்ச்சிகள், போன்ற பலதலைப்புகளில் சிந்தனையைச் செலுத்தவும், ஆய்வினைக் கொள்ளவும், முதல் முதலில் தோன்றியது “டார்வினின் பரிணாமக் கொள்கையே†ஆகும். தமிழ் மொழியின் ஆய்வினைக் கொண்ட பேரறிஞர்கள் தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், அகராதிகள், கல்வெட்டுகள், பிறமொழிக் கல்வெட்டுக்கள், அயல்நாட்டினர் குறிப்புகள், நடுகற்கள், அரசுச் சாசனச் செப்பேடுகள், தொல் பொருட்களின் மீது எழுதப்பட்ட வரி வடிவங்கள் போன்ற பல மொழி வரலாற்றுச் சான்றுகளைப் பயன்படுத்தி மொழி வரலாற்றைப் படைக்கின்றனர்.



ஆற்றுச் சமவெளி நாகரிகங்கள்

ஒரு வரலாற்றைப் படைக்க, ஒரு நாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ள, ஒரு மொழியை அறிந்துகொள்ள அடிப்படையாக அமைவது ஆற்றுச் சமவெளி நாகரிகங்களே! இத்தோடு ஒத்துழைப்புத் தருபவைகள் மொழி இலக்கணங்களும், இலக்கியங்களும், அனைத்து விதமான ஆதாரங்களைக் கொண்டு உலக வரலாற்றைக் கண்டறிந்த ஆய்வு நிபுணர்கள், மொழி வரலாற்றையும் கண்டறிந்துள்ளனர். தமிழ்மொழியின் தொன்மையையும், தோற்றத்தையும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் பின்வரும் பகுதிகளில் நன்கு அறிவோம்.



சார்லஸ் டார்வின்

இங்கிலாந்து நாட்டின் வரலாற்று மேதை திரு. சார்லஸ் டார்வின் எழுதிய “உயிரினத்தோற்றம்†வாயிலாக கடல் வாழ் உயிரினங்கள், மற்றும் குரங்கையொத்த உருவைக் கொண்ட “மாந்தன் (Lemuria)†போன்ற உயிரினத் தோற்றங்களை அறிகின்றோம். மேலும் “மனிதனின் பாரம்பரிய வளர்ச்சி†என்னும் நூலின் வாயிலாக குமரிமாந்தனையும், மனித இன பரிணாம வளர்ச்சியையும் உணரமுடிகிறது.



இந்தியா என்று இன்று சொல்லப்படுகின்ற நாட்டின் ஆதி(பூர்வீக) குடிமக்கள் தமிழர்களே.

இந்தியா என்ற பெயர் எப்படி வந்தது? சிந்து நதி திபெத்திய பீடபூமியில் ஊற்றெடுத்து ஜம்மு-காஷ்மீரின் லடாக் மாவட்டம் வழியாகக் கடந்து பாகிஸ்தானின் கில்கிட்-பல்டிஸ்தான் பகுதிக்குள் நுழைகிறது. பின், பாகிஸ்தானின் முழு நீளத்திற்கும் ஓடி தென்மேற்கில் அரபிக் கடலில் கராச்சி நகருக்கருகில் கலக்கிறது. கராச்சி மட்டுமல்லாமல் வேறு பல முக்கியமான பாகிஸ்தானிய நகரங்களும் இதன் கரையிலேயே உள்ளன. கராச்சி தவிர ஹைதராபாத், இஸ்லாமாபாத் ஆகிய நகரங்கள் சிந்து நதிக்கரையில் உள்ளன. லாகூர் மற்றும் மூல்தான் ஆகிய நகரங்கள் சிந்துவின் துணை நதிகளான ராவி மற்றும் சீனாப் ஆகியவற்றின் கரைகளில் உள்ளன. 



சிந்து நதியைப் புராதானக் காலத்திலிருந்து பல பெயரிட்டுப் பலரும் அழைத்து வந்துள்ளார்கள். பாரசீக மொழியில் இண்டிகோ நீல நீர் எனப் பொருள்படும் வகையில் "நீலௌ" என்றழைத்தனர். பஷ்டூன் மொழியில் நதிகளின் தந்தை எனப் பொருள்படுமாறு "அபாசின்" என்றழைத்தனர். அவஸ்தன் மொழியில் "ஹிந்து" என்றழைத்தனர். திபெத்திய மொழியில் சிங்க நதி எனப் பொருள்படுமாறு "செங்கே சூ" என்றழைத்தனர். கிரேக்கர்கள் இதனை "இண்டோஸ்" என்றழைத்தனர். அவஸ்தன் மொழியில் ஹிந்து என்று அழைத்ததன் அடிப்படையிலேயே பிற்காலத்தில் பாரசீகர்கள் அப்பகுதியையும், அங்கு வாழ்ந்த மக்களையும் ஹிந்துஸ்தான், ஹிந்துஸ்தானியர் அல்லது ஹிந்துக்கள் என அழைக்க ஆரம்பித்தனர். சிந்து நதிக்கரையில் வாழும் மக்களே ஹிந்துக்கள் என்றழைக்கப்பட வேண்டும்.  இண்டோஸ் என இந்த நதியை அழைத்த கிரேக்கர்கள் சொல்லிலிருந்தே இண்டியா என்ற வார்த்தை வருகிறது. இதைக் கொண்டே பின்னாளில் ஐரோப்பியர் மொத்த துணைக்கண்டத்திற்கும் இண்டியா எனப் பெயரிட்டு துணைக்கண்டத்தின் கீழே இருந்த பெருங்கடலுக்கும் இந்தியப் பெருங்கடல் என்று பெயரிட்டு விட்டார்கள். 



சிந்துவின் பூர்வகுடிகள் தமிழர்களின் முன்னோடிகள். தமிழினம் வடமேற்கே சிந்துவிலிருந்து தெற்குக் கோடியில் குமரிக் கடல் வரை பரந்து விரிந்து வாழ்ந்து வந்தார்கள். 

ஆழிப்பேரலைகளால் குமரிக் கண்டத்தின் தென்பகுதிகள் கடலுக்குள் மூழ்க, ஆரியப் பேரலைகளால் குமரிக் கண்டத்தின் வடமேற்குப் பகுதிகள் அழிக்கப்பட்டுத் தமிழ் நாகரித்தின் சிகரமாக விளங்கிய ஹரப்பா, மொகஞ்சொதாரோ ஆகிய நகரங்கள் அழிக்கப்பட்டன

தமிழர்களின் முன்னோடிகளின் எச்சங்களாக பிராகுயி பேசும் மக்கள் இன்றளவும் பாகிஸ்தானின் பலுச்சிஸ்தானத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இன்றளவும் வட இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகளைப் பேசும் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். 

ஹரப்பா, மொகஞ்சதாரோவை விடப் பல மடங்கு நாகரிகத்தில் சிறந்த தொல்தமிழர் நகரங்கள் குமரிக் கடலின் கீழ் ஆழ்ந்து கிடக்கின்றன. அழிந்து விட்ட இவ்வரலாறுகளைப் பற்றிய குறிப்புகள் பழந்தமிழ் நூல்களெங்கும் நிறைந்து கிடக்கின்றன. குமரிக் கடலில் அகழ்வாராய்ச்சி செய்தால் அமிழ்ந்து கிடக்கும் இந்நகரங்கள் மட்டுமன்றி நாம் படித்தறியாத முதற்சங்கம் மற்றும் இரண்டாம் சங்கம் ஆகிய சங்க கால நூல்களும் கிடைப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது. 





ஞால நிலப்பாகம் இன்றுள்ளவாறு 7 கண்டங்களாகவும் ஆயிரக்கணக்கான தீவுகளாகவும் தொனறு தொட்டு இருந்ததில்லை. ஒரு காலத்தில் அது காண்டவனம் (Gondwana) பாலதிக்கம் (Baltica) அமசோனியம் (Amazonia) அங்காரம் (Angara) என்ற நாற்பெரு நிலங்களாகவும் ஒரு சில தீவுகளாகவும் பகுத்திருந்தது என்ற தேவநேயப் பாவாணர் தம் தமிழர் வரலாறு நூலில் வி.ஆர். ராமச்சந்திர தீட்சதர் எழுதிய வரலாற்று முன்னைத் தென்னிந்தியா எனும் நூல் கருத்தை பதித்துள்ளார்.





நாவலந் தீவே இறலித் தீவே

குசையின் தீவே கிரவுஞ்சத் தீவே

சான்மலித் தீவே தெங்கின் தீவே

புட்கரத் தீவே எனத்தீ வேழே

ஏழுபெரும் தீவும் ஏழ்பொழி லெனப்படும்



என்பது திவாகர நிகண்டு ஏழு கண்டங்களாக ஞாலம் இருந்ததை திவாகர நிகண்டு வழி அறியலாம். உயிரினங்களின் இடம்பெயர்வும் பாதீடும் பற்றிய அதிகாரத்தில் ஞாலத்தின் மேற்பரப்பில் அடிக்கடி மாறிக் கொண்டிருக்கும் நீர்நிலப் பாதீட்டைக் குறிக்கும் போது எக்கெல் இந்து மாவாரி ஒரு காலத்தில் சந்தாத் தீவுகளினின்று தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாய் ஆப்ரிக்காவின் கீழ்கரை வரைக்கும் பரவி இருந்த ஒரு கண்டமாயிருந்தது என்பார்.



கிளேற்றர் இப்பழங்காலப் பெருங்கண்டத்திற்கு அதில் வதிந்த குரங்கொத்த உயிரி பற்றி இலெமூரியா என்று பெயரிட்டுள்ளார் எனவும் பாவாணர் "தமிழர் வரலாறு" எழுதுகையில் பதிந்துள்ளார். 


மறை நூலும் மகாபாரதமும் 
 
மகாபாரதத்தில் யயாதி என்று ஓர் அரசன். அவன் சுக்கிரச்சாரி என்பவனின் மகள் தேவயானியை மணந்தான். ஒரு பூசலில் அவளுக்கு வேலைக்காரியாகப் பணிக்கப்பட்ட அசுர அரசனின் மகளும் உடன் செல்கிறாள். அவள், அரசனைத் தன்வயப்படுத்துகிறாள். இருவரும் மக்களைப் பெறுகின்றனர். இதனால் சினமடைந்த சுக்கிராச்சாரி அவனை முதுமையடையச் சபிக்கிறான். மருமகன் கெஞ்ச தன் மகன்களிலொருவனிடமிருந்து இளமையைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறுகிறான். மனைவியின் மகன்கள் மறுக்க வேலைக்காரியின் மகன் ஒருவன் ஏற்றுக் கொள்கிறான். தனக்குப் பின் அவனை அரசனாக்கி விட்டு மனைவியின் மகன்களைத் துரத்தி விடுகிறான். அவர்களில் ஒருவன் பெயர் யது. அவனது வழி வந்தவர் யாதவர். வேலைக்காரி மகன் வழி வந்தவர்கள் பாண்டவரும் நூற்றுவரும்.

ஊத மறைநூலில் ஒரு கதை. ஆபிரகாமுக்குக் குழந்தை இல்லை. அவன் மனைவி வேண்டியதால் வேலைக்காரி மூலம் ஒரு பிள்ளையைப் பெறுகிறான். அவனுக்கு 99-ம் மனைவிக்கு 90-ம் அகவையான போது அவள் ஒரு பிள்ளையைப் பெற்றாள். வேலைக்காரியின் பிள்ளையைத் துரத்தி விட்டாள். அவளது பிள்ளை வழி வந்தவர் ஊதர். வேலைக்காரி வழி வந்தவர் அரேபியர். வேலைக்காரி பிள்ளை பெறுதல், முதுமை இரண்டும் இக்கதைகளின் பொதுவான கதைக் கருக்கள். இது போன்ற மிக வியப்பூட்டும் ஒற்றுமைகள் நம் இந்தியத் தொன்மங்களுக்கும் ஊத மறைநூலுக்கும் உள்ளன.


“மிசிரத்தானம்” என்ற சொல்லுக்கு, எகிப்து எனும் நாட்டின் பெயர் என்கிறது தமிழ்மொழி அகராதி. யயாதியின் மகன் யதுவின் வழிவந்தவர்கள் இங்கு குடியேறினர் என்கிறது. மிசிரம் என்றால் கலப்பு என்றும் பொருள் கூறுகிறது.


சீனமும் எகிப்தும் குமரிக் கண்டப் பண்பாட்டோடு தொடர்புடையவை. அவை தங்கள் நாட்டை நான்கு அரச மரபுகள் ஆண்டன என்கின்றன. நம் பண்பாட்டில் மறைகளில் முதலில் வருணன் போற்றப்படுகிறான். அடுத்து அவன் தூற்றப்பட்டு இந்திரன் போற்றப்படுகிறான். தொடர்ந்து தொன்மம் இந்திரனை இகழ்ந்து கண்ணனைப் போற்றுகிறது. மகாபாரதம் கண்ணனை வேடன் கொன்றதைக் காட்டுகிறது. வருணன் தொடங்கி முருகன் வரை நான்கு நிலங்களைச் சார்ந்த அரச மரபுகளால் குமரி தொடங்கி வைத்த பாண்டியப் பேரரசு விளங்கியதை சீன, எகிப்திய மரபுகள் பதிந்துள்ளன எனலாம்.


மகாபாரதப் போரில் துரியோதனன் நாக மரபைச் சேர்ந்தவனாகக் கூறப்பட்டாலும் அவனுக்கு மீனவர் தொடர்பு காட்டப்படுகிறது. அவனது பூட்டனான சந்தனு முதலில் கங்கையையும் பின்னர் மச்சகந்தி எனப்படும் மீனவப் பெண்ணையும் மணந்தான். அந்த மீனவப் பெண் வழி வந்தவர்களே நூற்றுவரும் பாண்டவர்களும். அதில் பாண்டவர்கள் இந்திரன், இயமன், வாயு, அசுவினி தேவர்கள் என்ற பிறருக்குப் பிறந்தவர்கள் என்ற வகையில் மரபு மாறிப் போனவர்கள். நூற்றுவரை எதிர்த்த போரில் கண்ணனும் இந்திரனின் மகனான அர்ச்சுனனும் சேர்ந்து நிற்பதையும் காணலாம். மீனவர்கள் நாகமரபினரே என்று வி. கனகசபையார் போன்றவர்கள் கூறுகின்றனர். நாகர்கோயில் தொடங்கி நாகூர் வரை நாகர்களின் பெயரிலமைந்த கடற்கரை ஊர்களைக் காண்கிறோம். நாகரம்மன் (நாகர்கோயில்), பிடாரி, புற்றடி மாரியம்மன் (சீர்காழி) என்று அம்மன்களின் வழிபாடும் நடைபெறுகிறது.


ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் மதுரை அழிவிற்கும் மகாபாரதப் போருக்கும் கூடத் தொடர்பு இருக்கலாம்.


யாயாதியால் துரத்தப்பட்ட யதுவின் வழிவந்தவர்கள் கபாடபுரத்தில் ஆண்டு கொண்டிருந்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். மதுரை அழிந்து சில நூற்றாண்டுகள் சென்று தமிழறிஞர்கள் சேர்ந்து வெண்டேர்ச் செழியன் என்பவன் தலைமையில் புதிய தமிழ்க் கழகத்தைத் தோற்றுவித்திருக்கலாம். அங்கு நூற்றுவர் வழிவந்த அல்லது அவர்களுக்கு உறவான வேடர்கள் அவர்கள் மீது படையெடுத்து அவர்களைத் துரத்தி விட்டுத் தங்கள் ஆட்சியை அமைத்திருக்கலாம்.


உலகில் ஆண்டுமுறைகள் அனைத்தையும் அமைத்தவர்கள் குமரிக் கண்டத் தமிழர்கள் என்கிறோம். அவர்கள் ஐந்து வகையாகத் தொடங்கும் ஆண்டு முறைகளை வகுத்திருந்தனர். சம்வத்சரம், பரிவத்சரம், இடவத்சரம், அனுவத்சரம், உதயவத்சரம், ஆகியவை அவை. சர ராசிகள் எனப்படுபவை மேழம், கடகம், துலை, சுறவம் ஆகிய நான்கும் ஆகும். கடகத் திருப்பம், சுறவத் திருப்பம், வடக்கே செல்லும் போது மேழம் தெற்கே செல்லும் போது துலை என்று கதிரவன் நில நடுக்கோட்டைத் தொடுகையில் இருக்கும் இரண்டு ஓரைகள் என்று இவற்றை இவ்வாறு அழைக்கின்றனர்.; நம்மிடையில் பொங்கல், சித்திரை, ஆடிப் பிறப்பு, ஐப்பசி விசு ஆகியவற்றைக் கொண்டாடும் பழக்கம் உள்ளது. இவ்வகையில் மேழத்தில் பிறக்கும் ஆண்டுக்கு சம்வத்சரம் என்பது பெயர்(அபிதான சிந்தாமணி பார்க்க). பிறவற்றில் எவற்றுக்கு எவை என்பது தெரியவில்லை. இவை நான்கையும் நீக்கி மலையாள ஆண்டு போன்று (மடங்கல்-சிங்கம்) வேறு ஓரைகளில் தொடங்கும் ஆண்டுகள் ஐந்தாவது வகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதைத் தவறாகப் புரிந்துக் கொண்டு 5 ஆண்டுமுறை என்பதை ஐந்தைந்து ஆண்டுகளைக் கொண்ட உகம் என்ற தொகுதி என்று ஆய்வாளர் இராமதுரை அவர்கள் கருதுகிறார்.



இப்போது யாதவர் ஆட்சி முடிந்து வேடர்கள் - முருகன் ஆட்சி தொடங்கியது. இவர்கள் ஆண்டு முறையில் ஒரு மாற்றம் செய்தனர். ஏற்கனவே தலைநகரம் நிலநடுக்கோட்டில் இருந்த போது மேழ ஓரை தொடங்கும் இன்றைய மார்ச் 21-இல் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போது 24 நாட்கள் தள்ளிப் போடப்பட்டது. ஏனென்றால் கபாடபுரம் ஏறத்தாழ 6 பாகைகள் வடக்கேயிருந்தது. இதனால் சுறவத்தில் பிறக்கும் ஆண்டு, மேழத்தில் பிறக்கும் ஆண்டு என்று எல்லாமே மாறிப் போய்விட்டன. இந்த மாற்றத்துடன் கலியாண்டு முறை புகுத்தப்பட்டது. கண்ணன் இறந்த நாளிலிருந்து கலியாண்டு தொடங்குவதாக மரபு உள்ளது அனைவருக்கும் தெரியும். அதை யாதவர்கள் துவரையம் பதியாகிய கபாடபுரத்திலிருந்து துரத்தப்பட்ட நாளிலிருந்து தொடங்கப்பட்டது என்று மாற்றிப் புரிந்து கொள்ளலாம். இந்த எம்முடிவுக்குத் துணையாக ஒரு செய்தி உள்ளது. பண்டை எகிப்தியர் கி.மு. 3100 வாக்கில் தொடங்கும் ஓர் ஆண்டு முறையைக் கையாண்டணர் என்பதும் அவர்கள் வெளியிலிருந்து ஓர் உயர்ந்த நாகரிகத்தோடு குடியேறியவர்கள் என்பதும் அதுபோல் தென் அமெரிக்காவில் குடியேறியுள்ள மக்களும் அதே காலத்தில் தொடங்கும் ஓர் ஆண்டு முறையைக் கையாண்டுள்ளனர் என்பதும்.

கரிகால் சோழன் வென்ற வட இந்திய அரசர்களில் ஒருவனான இருங்கோவேள் என்பவன் துவரையை ஆண்ட வேளிர் குடியில் 49 தலைமுறைக்குப் பிந்தியவன் என்று கூறப்படுகிறது. கண்ணன் இறந்தபின் துவரையிலிருந்து வெளியேறிய யாதவர்களாகிய வேளிர்களில் அவனும் ஒருவன் என்று கூறப்படுகிறது. அவன் முன்னோர் விட்டு வெளியேறிய துவரை வடக்கே உள்ள துவாரகையாகவே இருக்க வேண்டும். தலைமுறைக்கு 50 ஆண்டுகள் என்று சராசரியாக வைத்துக் கொண்டால் 2450 ஆண்டுகள் ஆகின்றன. முதல் கரிகாலன் காலம் கி.மு. 150 என வைத்துக் கொண்டால் 2450 + 2150 = 4600 ஆண்டுகள். கலியாண்டு கணக்கிலிருந்து 400 ஆண்டுகள் வேறுபாடு இவர்கள் கபாடபுரமாகிய துவரையம்பதியிலிருந்து வடக்கிலுள்ள துவாரகைக்குக் குடிபெயர்ந்து தெற்கு நோக்கி நகர்ந்ததற்கு இடைப்பட்ட காலத்தைக் குறிக்கலாம்.
                                                                                                                                                                                            - தொடரும்


மயன் வரலாறு

மயன்
மயன் என்பவர் குமரிக்கண்டத்தின் சடைச்சங்கத்தில் உள்ள சங்கப்பலகையை செய்த சிற்பி. இவரின் சங்கப்பலகையிலேயே அகத்தியம், ஐந்திரம் போன்ற பழந்தமிழ் இலக்கிய நூல்கள் ஏற்றப்பட்டன.

மயன் வரலாறு

மயன் குமரி நாட்டில் பிறந்தவர். இவரது தாய் கருங்குழலியும் தந்தை திருமூலரும்(பதினெண் சித்தர்களுள் ஒருவரா என்று தெரியவில்லை) ஆவர்.
மயன் பிறந்தநாள் - தைத்திங்கள் பௌர்ணமி
லக்னம் - மகரம்
நட்சத்திரம் - பூசம்
ராசி - கடகம்[1]

மயனும் தமிழ்சங்கமும்

  • மயன் தமிழ்ச்சங்கத்தில் இருந்தவர் என்பதை
செந்தமிழ் இயக்கங்கண்டேன்
என்ற மயனின் பாடலை வைத்து அறியப்படுகிறது.
  • மயன் சங்கப்பலகை செய்ததை
அவைக்களப் பலகை கண்டு அருந்தமிழ் பலகை யாக்கி
அவைக்களச் சான்றோர் வாழ்த்த அருந்தமிழ் பலகை ஏற்றி
அவைக்கள வேந்தன் வாழ்த்த அருந்தமிழ் நூல்களெல்லாம்
அவையுளோர் கண்க ளிக்க அரங்கேற்றி நின்றதன்றே -(ப.நூ.30)
என்ற பாட்டின் வழியறியலாம்.

கலைமூலன்

  • மயனே தமிழர்களின் கட்டடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும், ஓவியக் கலைக்கும், வானியற் கலைக்கும், மரக் கலைக்கும் தந்தை ஆவான். அவன் எக்கலைகளிலும் வல்லவன் என்பதை பழந்தமிழ் கலை நூல்கள் சொல்கின்றன 

.நூல் பதிவுகள்

மயன் பற்றிய மற்ற பதிவுகள்.
  • சிலம்பு
  • மணிமேகலை
  • வைசம்பாயனம்
மேலும் வைசம்பாயனத்தின் 318,386,899,978,1084,1166,1177 பாடல்கள் மயன் பற்றி கூறுகிறது.

மயனின் முக்கிய நூல்கள்

  • 1.செந்நூல்கள்
எண் நூல் பெயர் ஆங்கில மொழிபெயர்ப்பு
1. ஓவியச்செந்நூல் Treatise on drafting & painting
2. சிற்பமாச் செந்நூல் Treatise on Iconometry
3. கட்டிடச் செந்நூல் Treatise on Architecture
4. நிலமனைச் செந்நூல் Treatise on house building based on the land quality
5. மனைநிலச் செந்நூல் Treatise on land based on house building's nature
6. வானியல் செந்நூல் Treatise on Astro - Physics
7. பெருநடச் செந்நூல் Treatise on the Dance
8. மூலிகைச் செந்நூல் Treatise on Herbs
9. கணிதமாச் செந்நூல் Treatise on Mathematics
10. மரக்கலச் செந்நூல் Treatise on Ship building
11. விண்கலச் செந்நூல் Treatise on Space ship
12. ஏழிசைச் செந்நூல் Treatise on Music
  • 2.பொது நூல்கள்
2.1.ஐந்திரம்
2.2.பிரணவ வேதம் (நான்மறைகளுக்கும் முற்பட்டது)
2.3.மயமதம் (கட்டிடவியல்-வாஸ்து)
2.4.சூரிய நூல் (வானியல்)
மற்றும் பல.

சிற்றம்பலச்சிற்பம்

  • மயனின் நடராச சிற்பம் உணர்த்துவது
ஐந்தொழிலையும் (படைத்தல்-மூலம், காத்தல்-சீலம், அழித்தல்-காலம், மறைத்தல்-கோலம், அருளல்-ஞாலம்), தனித் தொழிலாகச் செய்யும் மூலத்தின் வடிவமே நடராச திருவுரு என்கின்றான்.

மயனின் சீடர்கள்

எண் பிரிவு சீடர்கள் பெயர்
1. தமிழ் நாதன், ஆயன், மூலம், நூலன்.
2. சிற்பம் கீதன், போதன், வேதன், சீலன்.
3. நளினக்கலைகள் தூயன், மாயன், நேயன், வேலன்.

மயன் முக்கோண விதிக் குறிப்புகள்

மயனின் செங்கோண முக்கோண விதி
படக்குறிப்பு
  • இது செங்கோண முக்கோணத்துக்கு மட்டுமே பொருந்தும்.
  • தே=செம்பக்கம் (hypotenuse)
  • சி =சின்னபக்கம்
  • பெ=பெரிய பக்கம் (செம்பக்கம் தவிர்த்து)
செய்முறை
  1. முதலில் சின்னப்பக்கத்தின் அலகை இரண்டால் வகுத்துக் கொள்ளுங்கள். (எ.கா. 3/2 =1.5)
  2. அடுத்து பெரியப்பக்கத்தின்(செம்பக்கம் தவிர்த்து) அலகை ஏழால் பெருக்கி வரும் விடையை எட்டால் வகுத்துக் கொள்ளுங்கள். (எ.கா. 4*7/8 =3.5)
  3. மேலுள்ள இரண்டு விடையின் கூட்டே செம்பக்கத்தின் நீளம். (எ.கா. 3.5 + 1.5 = 5 அலகுகள்)
மேலுள்ள எளிய விதியின் படி "தே = செம்பக்கத்தை" கண்டுபிடிக்க வர்க்க மூலமோ வர்க்கமோ தேவையில்லை.(no need for squares & square roots). இது மயனின் சிற்ப நூலின் படி பல்லாயிரம் ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. இது பித்தாகரசு செங்கோண முக்கோணவிதியை விட மிகப்பழைய மற்றும் எளிய விதியாகும். மேலும் (π=pi=பை)யின் மதிப்பையும் மயன் கண்டுள்ளார்.




Monday, October 17, 2011

காளையார் கோயில் வரலாறு



காளையார் கோயில் வரலாறு

கோயில் என்று தமிழில் வெறுமே சொன்னால் அது தில்லையையும், திருவரங்கத்தையும் தான் குறிக்கும். அவற்றை விடுத்து, சிவகங்கைக்கு அருகில் உள்ள காளையார் கோயிலைத் தான், வரலாற்றுத் தாக்கம் ஏற்படுத்தியதாய் நான் சொல்லுவேன்.
(காளையார் கோயில் என்பது, இன்று கோயிலுக்கும் ஊருக்குமான பெயர். சங்க காலத்தில், கானப் பேரெயில் என்று தான் ஊருக்குப் பெயர் இருந்தது. (கானத்தில் இருக்கும் பெரிய கோட்டை கானப் பேர் எயில்.)
காளையைக் குறிக்கும் பழந்தமிழ்ச்சொல் ஏறு. சங்ககாலத்தில் இவ்வூர் ஏறை என்னும் பெயருடன் விளங்கியது. இதன் அரசன் ஏறைக்கோன். குறமகள் இளவெயினி என்னும் புலவர் இந்த அரசனின் பெருமையைப் போற்றியுள்ளார்.
சோழ நாட்டில் இருந்து, ஈழம் செல்ல ஒரு பக்கம் ஆதி சேது என்னும் கோடியக் கரை; இன்னொரு பக்கம் மதுரை வழியாய் இராமேச்சுரம். இரண்டாவது வழியில், கடலாழம் அன்றைக்கு மிகவும் குறைவு; கிட்டத்தட்ட ஓராள், இரண்டாள் உயரம் தான் பல இடங்களில் இருக்கும்; வெகு எளிதில் ஈழம் போய்விடலாம். மதுரையில் இருந்து இராமேச்சுரம் போக, காளையார் கோவில் கானத்தைக் கடக்க வேண்டும்.
கானப்பேரை ஆண்டுவந்த கோதைமார்பனை வீழ்த்தி கானப் பேரெயிலைப் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி கடந்ததாக சங்க இலக்கியம் பேசும். (அப்படிக் கடந்து, குறுநில மன்னனை தோற்கடித்தால் தானே நெல்லையும், நாஞ்சிலும், குமரியும் பாண்டியனின் கட்டுக்குள் தொடர்ந்து இருக்கும்?) இன்றைக்கு நாம் காணும் சங்க இலக்கியங்களைத் தொகுத்தது, இந்தப் பாண்டியனின் பேரவையில் தான்.
கானப்பேரெயிலைச் சுற்றி இருக்கும் காட்டின் அடர்த்தி தமிழக வரலாற்றில் பெரிதும் பேசப்பட்டிருக்கிறது. பேரரசுச் சோழர் (imperial chozhas) காலத்தில், இந்தக் காடு இன்றையைக் காட்டிலும் பரந்து பட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வரை இருந்திருக்க வேண்டும்.
(அதே போல திண்டுக்கல், அழகர்கோயில் வரை இன்னொரு காடு தொட்டுக் கொண்டிருக்கும்.) கானத்தின் வடகிழக்கு எல்லையாய் கான் நாடு காத்தான் என்னும் பெயர் கொண்ட எங்கள் பக்கத்து ஊர் தென்படுகிறது. “இராசராசனும், இராசேந்திரனும், இன்ன பலரும், தங்களின் பெரும்படையை கானபேரெயிலின் வழியே நகர்த்தி ஈழம் போயிருக்க வேண்டும்” என்று ஆய்வாளர் ஊகிக்கிறார்கள்.
இலங்கையில் இருந்து படையெடுத்து வந்த இலங்காபுரத் தண்டநாதன் கூட, எதிர்வரவாய், மதுரை நோக்கிக் காளையார்கோயில் வழி படையெடுத்துப் போயிருக்கிறான். [சிங்களத்தாருக்கும், நமக்கும் இடையுற்ற உறவாடல்கள், சண்டைகள், பெண் கொடுப்பு, பண்பாட்டுப் பரிமாறல்கள் போன்றவற்றை நம் வரலாறுகள் சொல்லித் தருவதில்லை.
வடபுலத்தாரைக் காட்டிலும் சிங்களத்தாரும், கன்னடத்தாரும் நமக்கு முகன்மையானவர்கள் என்பதே வரலாற்று உண்மை.]
காளையார் கோயிலின் மூலவரைக் காளீசர் என்றும், அம்மனைச் சொன்னவல்லி (சொர்ணவல்லி) என்றும் அழைக்கிறார்கள். காளியப்பன், சொர்ணவல்லி என்ற பெயர்கள் சிவகங்கை வட்டாரத்தில் மிகுதியும் உண்டு.
கோயிலின் உள்ளே, அருகருகே, மூன்று கருவறைகள் உண்டு. காளீசருக்கு ஒருபக்கம் சோமேசரும், இன்னொரு பக்கம் மதுரையை நினைவுறுத்துமாப் போல சுந்தரேசரும், இருக்கிறார்கள். இவர்களுக்கு நாயகியாய்ச் சுந்தர நாயகியும், அங்கயற்கண்ணியும், உண்டு. ஆக மூன்று கோயில்கள் சேர்ந்து ஒரு பெருங்கோயிலாய் மாறியிருக்கிறது.
சம்பந்தர், சுந்தரரும், அருணகிரிநாதரும் இங்கு பாடியிருக்கிறார்கள். பதினோறாம் திருமுறையும் பாடுகிறது. திருவருட்பாவிலும் சொல்லப் பட்டிருக்கிறது. சிற்பக் கலை சிறந்து விளங்கும் இந்தக் கோயில் பிரமாண்டமானது. பலரும் பார்க்க வேண்டிய கோயில். வரகுண பாண்டியன் (1251-1261) காளீசருக்குத் திருப்பணி செய்து ஒரு சிறு கோபுரத்தை இங்கு எழுப்பியிருக்கிறான்.
பாண்டியருக்குப் பின்னால், நாயக்கர் ஆட்சியும், நவாபு ஆட்சியும் வந்து, முடிவில் சிவகங்கைச் சீமை முழுதும், 1604 ல் சேதுபதிகளுக்குக் கீழ் வந்து சேர்ந்திருக்கிறது. சேதுபதிகள் மதுரை நாயக்கர்களுக்கும், பின்னால் ஆற்காடு நவாபுக்களுக்கும் கீழ், தொட்டும் தொடாமலும், அவ்வப்போது கப்பம் கட்டி, அடங்கி இருந்திருக்கிறார்கள்.
கிழவன் சேதுபதி (1674-1710)க்கு அப்புறம் வந்த அவர் மகன் விசயரகுநாத சேதுபதி, தன் மகள் அகிலாண்டேசுவரியை நாலுகோட்டை பெரிய உடையாத் தேவரின் மகனான சசிவர்ணத் தேவருக்கு மணம் முடித்ததில் இருந்து, சிவகங்கைச் சீமை ஒரு தனித்த நிலை பெறுகிறது. திருமணத்திற்குப் பின்னால், சேதுநாட்டில் இருந்து மூன்றில் ஒருபங்கு பிரித்துச் சிவகங்கைச் சீமையில் சேர்க்கப் பட்டது.
சேதுநாட்டிற்கும் சிவகங்கைச் சீமைக்கும் எப்பொழுதும் வெதுப்பும், கனிவுமாய் அடுத்தடுத்து உண்டு. கொள்வினை – கொடுப்பிணை இருக்கும் சீமைகள் அல்லவா?
சசிவர்ணரின் மைந்தர் முத்துவடுக நாதருக்கு (இவர் பூதக்க நாச்சியார் என்ற இன்னொரு அரசிக்குப் பிறந்தவர்; சேதுபதியின் மகள் அகிலாண்டேசுவரிக்கு பிள்ளைகள் கிடையாது). மெய்க்காப்பாளராய் வந்து சேர்ந்தவர்கள் மருதிருவர். [இவர்கள் பிறந்த ஊர் அருப்புக் கோட்டைப் பக்கம்.
இவர்களின் தாயாரின் ஊர் சிவகங்கைப் பக்கம்.] முத்துவடுகரை ஆங்கிலேயரும், ஆற்காடு நவாபும் சூழ்ச்சி செய்து தொலைத்த பின்னால், அவர் மனைவி வேலுநாச்சியார் ஆட்சிக்கு வந்தார். முத்து வடுகர் ஆட்சியிலும், வேலுநாச்சியார் ஆட்சியிலும் மருதிருவர் பெரும்பொறுப்பு வகித்தார்கள். பெரிய மருது தலைமை அமைச்சராயும், சின்ன மருது தளபதியாயும் சேவை செய்தார்கள்.
, மருதிருவர் காலத்தில் காளையார் கோயிலுக்கும் தமிழக வரலாற்றிற்கும், நாவலந்தீவின் விடுதலைப் பெருங்கடனத்திற்கும் (ப்ரகடனம்) உள்ள தாக்கத்தை உணர்த்தும் முக்கிய நிகழ்வுகளைக் கூற விரும்புகிறேன்.
காளீசர் கோயிலை இன்றிருக்கும் அளவிற்கு பெரிதாக்கிக் கட்டியவர்கள் மருதிருவரே. மருதிருவரின் கோயில் திருப்பணிகள் பரந்து பட்டவை; அவற்றில் காளையார் கோவில் பணியே மிக உயர்ந்தது. பெரிய மருதுவின் முயற்சியால், 157 அடியில், கோயிலின் 9 நிலைப் பெரிய கோபுரம், சோமேசர் திருமுன்னிலைக்கு (சந்நிதிக்கு) முன்னால் கட்டப்பட்டது.
மதுரைக் கோயிலின் தெற்குக் கோபுரம் தவிர்த்து, மற்ற கோபுரங்கள் எல்லாம் காளீசர் கோபுரத்திலும் உயரம் குறைந்தவை தான். தெற்குக் கோபுரம் மட்டுமே 160 3/4 அடி உயரம் ஆகும். காளீசர் கோபுர உச்சியில் இருந்து கூர்ந்து பார்த்தால் (அல்லது தொலை நோக்காடி – telescope – கொண்டு பார்த்தால்), தெளிவான நாளில் மதுரைத் தெற்குக் கோபுரம் தெரியும். பழைய பாண்டியர் கால வழக்கப் படி, மதுரையைப் போலவே பெருங்கோபுரம் எடுத்து கோயிலைக் கட்டியதால் தான், மருதிருவர்கள் பாண்டியர் என்றே மக்களால் அழைக்கப் பட்டார்கள். நாட்டுப் பாடல் ஒன்று,
கருமலையிலே கல்லெடுத்து காளையார் கோவில் உண்டுபண்ணி மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய மருது வாரதைப் பாருங்கடி
என்று அவர்களின் பெருமை சொல்லும். (இந்தப் பாட்டு “சிவகங்கைச் சீமை” திரைப்படத்திலும் வரும். பார்க்க வேண்டிய படம். கண்ணதாசன் எடுத்த படம்.)
கோயிலுக்கு வேண்டிய செங்கல்களை மானாமதுரைக்கு அருகில் உள்ள செங்கோட்டைச் சூளையில் உருவாக்கி, மக்களின் முயற்சியால், பல்லாயிரக் கணக்கானவர் வரிசையாய் நின்று, அஞ்சல் முறையில், செங்கோட்டை – மானாமதுரை – முடிக்கரை – காளையார் கோவில் என்ற (13 மைல்) வழியில் கொண்டு வரப் பட்டது. இது போன்ற கட்டுமான உத்தி (நாட்டு மக்கள் எல்லோரும் சேர்ந்து கட்டும் உத்தி) அதுவரையில் யாராலும் செய்யப் பட்டதில்லை.
இந்தக் கட்டுமானம் பற்றியே சிவகங்கையில் பல் வேறு கதைகள் உண்டு. (காளீசர் கோயிலில் பெரிய மருது தேரமைத்த கதையும், அதன் ஆசாரி பெரிய மருதுவிடம் இருந்து முடிவாங்கி ஒருநாள் மன்னரான கதையும், பின்னால் தேரோட்டம் முடியும் போது ஈகம் – தியாகம் – செய்து ஆசாரி உயிர்கொடுத்த கதையும் நம் மனத்தை ஈர்க்கும்) 1789 திசம்பரில் தொடங்கி 1794 ஆண்டிற்குள் இந்த ஆலயத் திருப்பணி முடிந்தது.
கோயிலுக்குத் தெற்கே உள்ள ஆனைமடு ஊருணி மிகவும் பெரியது. மதுரை வண்டியூர் தெப்பக்குளம் அளவிற்கு அது இருக்கும்.
மருதிருவருக்கு கிட்டத் தட்ட இரண்டாம் தலைநகராகவே காளையார் கோவில் இருந்தது. அவர்களின் படைகள் குவிக்கப் பட்டு, படைத் தளமும் அங்கு தான் இருந்தது. படைத்தளபதி சின்ன மருது, சிறுவயலில்  அரண்மனையில் தங்கியது போக, பெரும்பாலான நேரம் காளையார் கோயிலிலேயே இருந்து, படைநடவடிக்கைகளை கவனித்திருக்கிறார்.
அத்தனை படைத் தளவாடங்களும் கானப்பேர்க் கோட்டைக்குள் தான் இருந்தன. படையும் சிறப்பான திறமைகள் பெற்று ஆங்கிலேயர் படைக்குச் சரிநிகர் சமானமாய்த்தான் இருந்தது. இந்தக் காட்டினுள் மருதிருவரும் அலையாத இடம் கிடையாது.
பின்னால், மருது பாண்டியருக்கும் ஆங்கிலேயருக்கும் (கூடவே ஆற்காடு நவாபுக்கும்) இடையே, வரிவிதிப்பு மீறல், தன்னாளுமை போன்றவற்றால் பெருத்த சண்டைகள் ஏற்பட்டன. அந்தக் காலத்தில் சின்ன மருது ஒரு பெரிய தடவழிக்காரர்.
படையுத்திகளில் வல்லவர். அவர் தன் நாட்டு விடுதலையை மட்டும் பாராமல், நாவலந்தீவின் விடுதலைக்கே முதன்மையாய், வெள்ளைக்காரரை வெளியேற்ற வேண்டும் என்று, ஓர் எதிர்ப்புப் போராளி முன்னணியையே, உருவாக்கினார்.
அதில் திப்பு சுல்தான், வட கேரளக் குறுநிலக் காரர்கள், கன்னட அரசர்கள், மராட்டியத் தலைவர்கள், பாஞ்சாலங் குறிச்சி முதற்கொண்டு பல்வேறு தமிழகப் பாளையக் காரர்கள், போராளிக் கழகங்கள் என்று பல்வேறு உறுப்பினர்கள் இருந்திருக்கிறார்கள். தென்னிந்திய அளவில் இந்த முன்னணி விரிந்து பரந்திருந்தது.
இவர்களின் கூட்டங்கள் பலகாலம் திண்டுக்கல், திருப்பாச்சிப் பகுதிகளில் நடந்திருக்கின்றன. கூட்டணியின் தலைவரான சின்னமருதுவின் தடவழிக்கு இணங்கவே யாவரும் பணியாற்றியிருக்கிறார்கள். சின்னப் பாண்டியரின் “ஜம்புத்வீபப் பிரகடனம்” – படிக்க வேண்டிய ஒன்று – 1801 ஜூன் 16 க்கு முன்னால் திருவரங்கம் கோயிலின் வெளி மதிலில் முதன்முதலாய் ஒட்டப் பெற்றது.  பின்னால், திருச்சிக் கோட்டையின் வெளிச்சுவரிலும் ஒட்டப்பட்டது.
இந்தச் சீரங்க வெளியீட்டை அறிந்த ஆங்கிலேய அரசு, (அப்பொழுது சென்னையில் ஆங்கிலேயரின் ஆட்சியாளர் இராபர்ட் கிளைவின் மகனான எட்வர்ட் கிளைவ்.) 6.7.1801 ல் எதிர்ப்பு முன்னணியை முளையிலேயே கிள்ள வேண்டும் என்ற நோக்கில், அரசாணை பிறப்பித்தது. ஆங்கிலேயர் படையினர், பாஞ்சாலங்குறிச்சியில் தொடங்கி, ஒவ்வொருவராய் அழித்து, இடையில் மைசூரையும் 2 மாதங்களில் தொலைத்து, முடிவில் சிவகங்கைக்கு வந்தார்கள்.
கிட்டத் தட்ட 1801 மார்ச்சில் இருந்து அக்டோ பர் வரை 8 மாதங்கள் சிவகங்கைச் சீமையை முற்றுகையிட்டனர். ஆங்காங்கே சிறுசிறு வெற்றிகள் பெற்றாலும் முழு வெற்றியை ஆங்கிலேயரால் பெறவே முடியவில்லை. இத்தனைக்கும், அதுவரை இந்தியாவில் நடந்த எந்தப் போரிலும், இவ்வளவு ஐரோப்பியர் இறந்ததில்லையாம்; சிவகங்கைப் போரில் தான் அதிகம் பேர் இறந்திருக்கின்றனர்.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி தீர்மானமாய் நிலைத்ததில் இந்தப் போர் முகன்மையானது. (This war was decisive in firmly establishing English rule in India).
“காளையார் கோவிலைக் கைப்பற்றினால் தான், சிவகங்கை கவிழும்; முன்னணி உடையும்; மற்ற போரளிகள் தொய்ந்து போவார்கள்; சென்னைக் கோட்டை உறுதிபெறும், ஆங்கில அரசு நாவலந்தீவில் நிலைக்கும்” என்ற கருத்தில், கர்னல் அக்னியூ காட்டைச் சுற்றி வளைத்தான். 40 மைல் சுற்றளவும், குறுக்கே 11-12 மைல் நீளமும் கொண்ட காட்டின் இடையே அப்பொழுது வயல்களோ, ஊர்களோ இல்லை. காட்டை ஒரு பக்கம் வெட்டத் தொடங்கினால், நிழல் குறைந்து ஆங்கிலேயர் அணி (அதனுள் இந்தியர் மட்டுமில்லை, மலாய்க்காரரும் இருந்தனர்.) வெய்யிலில் நகர முடியாமல் தடைப் பட்டது. காட்டிற்குள் செல்லும் முயற்சி எதுவும் பலிக்கவில்லை.
முடிவில், காட்டிக் கொடுத்தவர்களின் உதவியோடு, மருது படை பயன்படுத்திய கமுக்க (secret) வழியை அறிந்து, அதன் வழியே படைநடத்தி, 30/9/1801 இரவு கழிந்து மறுநாள் புலரும் நேரத்தில், காளையார்கோவில் ஊர்வாயிலுக்கு அக்னியூ வந்து சேர்ந்தான்.
அதற்கு இடையில் ஒற்றர் மூலம் “கோயில் கோபுரத்தைப் பீரங்கி கொண்டு தகர்க்க” அக்னியூ திட்டமிட்டிருப்பதை அறிந்த மருது பாண்டியர் யாரும் நினைக்க முடியாத ஒரு செயலைச் செய்தார்கள்.
கில்ஜிகளின் காலத்தில், திருவரங்கக் கோயில் உலாத் திருமேனிகளுக்கு ஆபத்து வந்த போது, காளையார் கோயிலில் தான் அவை பாதுகாக்கப் பட்டன. (இது திருக்கோட்டியூர் வழியான தொடர்பு. இராமனுசர் காலத்தையும் அவருக்குப் பின்னால் ஏற்பட்ட உறவுகளையும் இங்கு எண்ணிக் கொள்ளுங்கள்.
இன்றைக்கும் திருக்கோட்டியூர் சிவகங்கைச் சமத்தானக் கோயில்.) இப்பொழுது காளையார் கோவிலுக்கே பாதகம் என்றால், என்ன செய்வது? 1783 – ல், திருவில்லிபுத்தூர் கோபுரத்தைத் தகர்ப்பதாய் அறிவித்து, நெல்லைப் பாளையக்காரர்கள் கப்பம் கட்ட ஒப்பிய பின்னரே, ஆங்கிலேயர் கோபுரத் தகர்ப்பைக் கைவிட்டனர்.
[இன்றைக்குத் தமிழ்நாடு அரசின் சின்னமாகப் போற்றுகிறோமே அந்தக் கோபுரம் தான் இது.] இதே போல சங்கரன் கோயில் கோபுரத்தையும் (பார்க்க வேண்டிய கோயில்) இடிப்பதாக அறிவித்த பின்னால், நெல்கட்டும் செவல் பூலித்தேவர், கோயில், கோபுரத்தைக் காப்பாற்றுவதற்காகச் சண்டை போடாமல் சரணடைந்தார். கோபுரத்திற்காக எதிரியிடம் சரணடைந்தவர் தமிழக வரலாற்றில் பலர் இருந்திருக்கிறார்கள். கோபுரங்கள் சொல்லும் வரலாற்றுக் கதைகள் தமிழகத்தில் மிகுதி.
அத்தனையையும் சீர்தூக்கிப் பார்த்த மருதிருவர், இரவோடு இரவாய் 78000 பேர் கொண்ட தங்கள் படையை, தளவாடங்களுடன், நகரை விட்டு நகர்த்தியிருக்கிறார்கள். 1801 அக்டோபர் முதல் தேதி அக்னியூ ஊரில் நுழைந்தான்; ஓர் எதிர்ப்பும் இல்லை.
முடிவில் ஒரு வெடி வெடிக்காமல், ஒரு துமுக்கு (rifle) வேட்டு இல்லாமல், ஒரு குண்டு இல்லாமல், ஆங்கிலேயர் கொடி காளிசர் கோபுரத்தின் உச்ச கலசத்தில் ஏறிப் பறக்க விடப்பட்டது; கவனம் கொள்ளுங்கள், கொடிபறந்தது கோட்டை வாசலில் அல்ல; கோபுர உயரத்தில். ஆக, காளீசர் கோபுரத்தையே ஆங்கிலேயர் பிடித்தார்கள். அதில்தான் அவர்களின் முழுக்கவனமும் இருந்தது. [பின்னால் அக்னியூவின் கோபுரத் தகர்ப்பு ஆணை ஆங்கிலேய அரசிதழிலேயே வெளிவந்தது.]
ஆக ஒரு கோபுரத்திற்காக, அதைக் காப்பாற்றுவதற்காக, தமிழக விடுதலை, ஏன் இந்திய விடுதலை, 146 ஆண்டுகள் தள்ளிப் போனது. போரே இல்லாது போனதால், போராளிகளின் போராட்டமும் பின்னால் பிசுபிசுத்தது.
இத்தனைக்கும் மருதுபாண்டியர் பெருத்த வலிமையுடன் இருந்தார்கள் என்றுதான் வரலாறு சொல்லுகிறது. மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய பெரிய மருது, காளீசர் கோபுரத்தைக் காக்காமல் வேறு என்ன செய்வார்? “இப்படி நடந்திருக்குமானால் – what if” என்ற கேள்வி வரலாற்றில் சிக்கலானது தான். . காளையார் கோயில் போர், இந்திய விடுதலையின் ஒரு முகன்மைக் குறியீடு. (வேலூர்க் கோட்டைச் சிப்பாய்ப் புரட்சியெல்லாம் அதற்கு அப்புறம் வந்தது, 1857 ல் வடக்கே நடந்த சிப்பாய்ப் புரட்சியும் இன்னும் பல ஆண்டு கழித்து வந்தது.) இந்திய வரலாற்றில் மருது பாண்டியரின் பங்களிப்பு சரியான முறையில் மக்களுக்குத் தெரிவிக்கப் படவில்லை.
காளையார் கோயிலை வசப்படுத்திய அக்னியு, பத்தே  நாட்களில், அக்டோபர் 11 அன்று, அந்தக் காட்டையே கொளுத்தினான்; சிவகங்கை, திண்டுக்கல் காடுகளைக் கொளுத்தும் படி கும்பினியின் மேலிடமே உத்தரவிட்டது. அன்று அழிந்தது தான் அந்தச் சீமை; காடு போயிற்று; அந்தப் பக்கமே வறண்டு, செங்காட்டு பூமியானது. உடன் இருந்த மெய்க்காப்பாளன் கருத்தான் காட்டிக் கொடுக்க, தொடையில் குண்டடி பட்டு, சின்னப் பாண்டியர் 4/10/1801 லேயே கைதானார். அடுத்த நாளில் கருத்தானின் கைகாட்டலில், அவருக்கு இருந்த பக்கவாதக் குறைவை சூழ்ச்சியால் ஏற்பட வைத்து, பெரிய பாண்டியரைக் கைது செய்தனர்.
(இரண்டு பாண்டியரும், நாட்டின் மேல் இருந்த காதலால், காளையார் கோவில் காட்டை விட்டு, அகலவே இல்லை; நினைத்திருந்தால் வட கேரளத்திற்கும், கன்னட தேசத்திற்கும் தப்பி, பின்னால் மீண்டு வந்து, அணிசேர்த்து, ஆங்கிலேயருக்கு எதிராய்த் திரும்பவும் படையெடுத்திருக்கலாம்; ஆனால் செய்யவில்லை.
மக்களின் மேல் இருந்த பற்று, நாட்டை விட்டு நகர வைக்காமல், அவர்கள் கண்ணை மறைத்தது.) இருவரும் திருப்புத்தூரில் அக்டோ பர் 24-ல் தூக்கில் இடப்பட்டனர். சிவகங்கை அரச குலம் அந்த மூன்றே வாரத்தில் ஒருவரில்லாமல் முற்றிலுமாய்க் கருவறுக்கப் பட்டது.