Saturday, August 27, 2011

பாண்டியன் நெடுஞ்செழியன் கி.பி. 205-215

தலையாலங்கானத்துச் செருவென்ற
பாண்டியன் நெடுஞ்செழியன்  
கி.பி. 205-215

நெடுஞ்செழியன் கி.பி. 205 முதல் 215 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பாண்டியன் நன்மாறனின் மகனான இவன் தன் பாட்டனான நெடுஞ்செழியனின் பெயரைக் கொண்டிருந்தான். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர் 6-7 வயதிலேயே முடிசூட்டப்பட்ட இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றிருந்தான்.

நெடுஞ்செழியன் ஆற்றிய போர்கள்

நெடுஞ்செழியன் இளையவன், வயது முதிராதவன் ஆற்றல் இல்லாதவன் என இகழ்ந்து சோழநாட்டை ஆண்ட இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேர நாட்டை ஆண்ட மாந்தரஞ்சேர விரும்பொறை, கொங்கு நாட்டினை ஆண்ட திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் போன்றோர் கூறினர். இவ்வனைவரும் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து மதுரையினை முற்றுகையிட்டனர். எதிர்த்துப் போரிட்ட நெடுஞ்செழியன் அனைவரையும் தோற்கடித்தான் என்பது வரலாறு இதற்குச் சான்றாக இப்பாடல்கள் விளங்குவது குறிப்பிடத்தக்கது.

"அன்னையின் அணைப்பிலே இருந்தவன்.ஐம்படைத்
தாலியும் கழட்டவில்லை!காலில் கிண்கிணி அணிந்துள்ளான்
பாலறாவாயினன்"

−(புறம்-77)
விளக்கம்:- தன்னை இளையவன் என்று இகழ்ந்து போருக்கு வந்த ஏழு அரசர்களையும் வெற்றி கொள்ள படை திரட்டினான். படை முன் நடக்க தேர் ஏறி வந்தான். ஏழு படைகளையும் தலையலங்கானம் என்ற இடத்தில் எதிர்த்தான். பகைவர் படைகளை முன்னிலைப்படுத்தினான். ஏழு அரசர்களையும் நோக்கி வீர சபதம் செய்தான்!.

"நடுதக்கனரே நாடுமீக் கூறுநர்
இளையன் இவன்' என உளையக் கூறி
படுமணி இரட்டும் பாஅடிப்பணைத்தாள்
நெடுநல் யானையும் தேரும்,மாவும்
படைசுமை மறவரும் உடையம் யாம் என்று
உறுதுப்பு அஞ்சாது உடல் சினம் செருக்கி
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமம் சிதையத்தாக்கி முரமொடு
ஒருங்கு அகப்படேஎன் ஆயின்-பொருந்திய
என் நிழல் வாழ்நர் செல்நிழல் காணாது
கொடியன் எம் இறை' எனக்கண்ணீர் பரப்பி
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவனாக
உலகமொடு நிலைஇய பலர் புகழ்சிறப்பின்
புலவர் பாடாது வரைக என்நிலவரை
புரப்போர் புன்கண்கூர
இரப்போர்க்கு ஈயா இன்மையான் உறவே"

−(புறம்-72)
விளக்கம்:- "என் நாட்டை விரும்பி வந்த பகைவர்கள் எள்ளி நகையாடத்தக்கவர்கள். 'இளையவன் இவன்' என வந்தனர். யானையும், தேரும், குதிரைப் படையும் உடையவன் நான் என்பதை உணராது வந்தனர். என் வலிமை அறியாதவர்கள். என் கோபத்தை மூட்டினர். போரில் அனைவரையும் சிதைந்து ஓடுமாறு செய்வேன். முடியையும், முரசத்தையும் கைப்பற்றுவேன். இல்லாவிட்டால் என் மக்கள் என்னைக் கொடியவன் என்று பழி தூற்றட்டும். மாங்குடி மருதன் முதலான புலவர்கள் என்னைப் பாடாது நீங்கட்டும். என்னிடம் யாசிப்போர்க்கு ஈய முடியாத வறுமை உடையவன் ஆவேன்" என்று வஞ்சினம் கூறினான்.
இடைக்குன்றூர் கிழாரும் இவனது வெற்றியைப்பற்றி (புறம்-76) இல் பாடுகின்றார்.

"நெடுங்கொடி உழிஞைப் பலரொடும் மிடைந்து
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க
ஒருதான் ஆகிப்பொருது களத்து அடலே"

−(புறம்-76)


சோழன் பெருநற்கிள்ளி, சேரன் மாந்தரஞ்சேரல், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய எழுவரும் பாண்டியனிடம் தோற்றவர்கள். தோற்று ஓடினார்கள். தொடர்ந்து சென்று உறையூரையும், வஞ்சியையும் வென்றான். அவ்வரசர்களின் உரிமை மகளிர் நாணமுற்று உயிர் துறக்குமாறு செய்தான். இவ்வாறு (புறம்-78) கூறுகின்றது.
இருங்கோவேளின் மிழலைக் கூற்றத்தையும், வேளிரது முத்தூர்க்கூற்றத்தையும் வென்றான் என(புறம்-24) கூறுவது படி தமிழகம் முழுவதினையும் வென்று ஆண்டான் என்பதனை அறிய முடியும்.
  
பாட்டுடைத் தலைவன்  
 
பத்துப்பாட்டில் மாங்குடி மருதனார் பாடிய மதுரைக் காஞ்சிக்கும் ,மதுரைக்கணக்காயர் மகனார் நக்கீரர் பாடிய நெடுநல்வாடைக்கும் பாட்டுடைத் தலைவன் நெடுஞ்செழியனான இவனே என்பது குறிப்பிடத்தக்கது. நெடுஞ்செழியனது அவைக்களப் புலவராகத் திகழ்ந்த மாங்குடி மருதனார் வீடு அடைய வேண்டிய அறநெறி கூறுவதற்காகவே இப்பாடலை நெடுஞ்செழியன் மீது பாடினார். நிலையாமையை எடுத்துச் சொல்லும் இந்நூல் இவனது முன்னோர்களின் சிறப்பும் செங்கோல் சிறப்பும், பாண்டிய நாட்டின் வளமும், மதுரையின் அழகும் கூறப்பட்டுள்ளன.

"தென்னவன் பெயரில் துன்னருந்துப்புன்
தொன்முது கடவுள் பின்னர்மேய
வரைத்தாழ் அருவிப்பொருப்பிற் பொருந"

என மதுரை சோமசுந்தரப் பெருமான் வழியில் தோன்றியவன் இவன் என மருதனார் கூறுகின்றார். இந்நூல் 782 அடிகளுடையதாகும். நெடுஞ்செழியன் போர் விரும்பும் இயல்பினன் என்பதனை

"ஒளிறிலைய வெஃகேந்தி
அரசுபட அமர் உழக்கி
அடுகளம் வேட்டு"

என்ற அடிகளினால் குறிப்பிடுகின்றார்.
நெடுநல்வாடையில் இவனது படைக்களம் விரும்பும் செய்தியினை நக்கீரர் "நள் என்ற யாமம்! பள்ளி கொள்ளாத நெடுஞ்செழியன் பாசறையில் திரிகின்றான். போரில் புண்பட்ட வீரர்கள் பாசறையில் படுத்துள்ளனர். அவர்களை நேரில் கண்டு ஆறுதல் கூற நலம் கேட்கச் செல்கின்றான். வேப்பம் பூ மாலை அணிந்த வேலுடன் வீரர் பின் தொடரச் செல்கிறான். குதிரைகள் கரிய சேற்றை பனித்துளியால் உதறும். பனிக்காற்று வீசும். தோளின்று நழுவிய வெற்றி வாளினை வலக்கையில் ஏந்தியவனாய், முத்துமாலை தொங்கும் (வெண்கெற்றக்) குடை அசைய சென்றான். புண்பட்ட வீரர்களின் முகம் மலர நலம் விசாரிக்கின்றான். புண் வலி நீங்கி புன்முறுவல் பூத்த வீரர்கள் நன்றியுடன் நோக்குகின்றனர். 'வேம்புதலையாத்த நோன்கால் எஃகமொடு' திரிகின்றான் பாசறையில்! பாண்டியன் மனைவி, நெடுஞ்செழியன் வருகைக்குக் காத்துக் கிடக்கின்றாள் மெல்லிய படுக்கையில். "பனிக்காற்று வீசுகிறது! அரசியின் காதல் உள்ளம் வெப்பம் அடைகிறது! சாளரங்களில் முத்து மாலைகளும், திரைச் சீலையும் மெல்ல அசைகின்றன! தூக்கம் வராத ஏக்கத்துடன் அரசி படுத்திருக்கின்றாள். இவளது ஏக்கத்தைப் போக்க அரசன் பாசறை நீங்கி வரவேண்டும். அரசனும் அரசியும் மகிழ்ந்திரவு நேரத்தைக் கழிக்க வேண்டும்" என்று நக்கீரர் நெடுநல்வாடையில் பாடுகின்றார்.


No comments:

Post a Comment